எல்லாளன் நடவடிக்கையில் காவியமான 21கரும்புலிகளின் நினைவு நாள் இன்றாகும்!

0 0
Read Time:66 Minute, 46 Second

22.10.2007 நேரம் விடிசாமம் 1.30 மணி. அந்த அநுராதபுர வான்படைத்தளம் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தது. நடக்கப்போவதை அறியாத அந்தத்தளம் சஞ்சலமில்லாமல் தூங்கிக் கொண்டிருந்தது. தனது பாதுகாப்பில் அத்தனை நம்பிக்கையும் இறுமாப்பும் அதற்கு. ஆனால் சிறிது நேரத்தில் ஒரு பெரும் பூகம்பத்தை மூட்டப்போகும் அந்தக் கரும்புலி வீரர்கள் இருபது பேரும் தங்களை களத்தில் இருந்தபடி வழிநடத்தப் போகும் அணித்தலைவன் இளங்கோவின் கையசைப்பிற்காகக் காத்திருந்தார்கள்.

This image has an empty alt attribute; its file name is 74876760_1360534814110477_2088587869571514368_n.jpg

இளங்கோ நிலைமையை அவதானிக்கின்றான். தனக்குச் சாதகமான நேரம் வரும்வரை காத்திருந்தான். அந்த நேரமும் வந்தது அவன் கரும்புலி வீரர்களைத் தனக்கு அருகாக அழைத்துக் கொண்டான். இறுதித் திட்டத்தை தெளிவாக அவர்களுக்கு விளங்கப்படுத்தினான்.

“எங்களிடம் இருக்கிற ஆயுதமெல்லாம் எதிரியின்ர இலக்குகளை அழிக்கிற ஆயுதங்கள். நாங்கள் வடிவா நிதானமா சண்டை பிடிப்பம். நாங்கள் இப்ப உள்ளுக்க போறம். சண்டை பிடிக்கிறம். எதிரியின்ர விமானங்களை உடைக்கிறம். விடுதலைப் புலிகளெண்டா ஆரெண்டுறதை சிங்களப் படையளுக்குக் காட்டுவோம்” இளங்கோவின் குரல் உறுதியாய் ஒலித்தது.
“வீமண்ணை என்ன எதிர்ப்பு வந்தாலும் நீங்கள் எம்.ஐ.24 நிக்கிற இடத்துக்கு வேகமாய்ப் போங்கோ. ஹெலி ஒண்டையும் எழும்ப விடாம அடிச்சு நொருக்குவம். அப்ப நாங்கள் வெளிக்கிடுவோம்.”இளங்கோவின் அனுமதி கிடைத்ததும் எல்லோரும் தங்கள் ஆயுதங்களை இயங்கு நிலைக்கு தயார் படுத்தியபடி உற்சாகமாக நகர தொடங்கினார்கள்.

இந்த நாளுக்காக அவர்கள் எத்தனை வருடங்கள் காத்திருந்தார்கள். எத்தனை கடின பயிற்சிகளுக்குள் மூழ்கியிருந்தார்கள். எல்லாமே இந்த நாளுக்காகத்தான். சின்னப் பிசகென்றாலும் எல்லாமுமே தலைகீழாக மாறிவிடும். அதனால் பயிற்சி கடுமையாக இருந்தது. யாரும் அசைந்து கொடுக்கவில்லை. பயிற்சிகளால் உடல் களைப்படையும்.ஆனால் அவர்கள் சோர்ந்ததேயில்லை. அவர்களின் எண்ணமெல்லாம் இலக்கு பற்றியதாகவே இருந்தது. பயிற்சித் தளத்தில் பயிற்சி ஆசிரியரின் சொல்லை அவர்கள் என்றுமே தட்டிக் கழித்ததில்லை. பயிற்சி சிறிது கடுமையாக இருந்தால் தங்குமிடத்தில் ஆசிரியரை அன்பாகக் கிண்டலடிப்பார்கள்.

அங்கு சிரிப்பொலிகள் எழும். கைகள் ஆயுதங்களைத் துப்பரவு செய்து கொண்டிருக்கும். இப்படி கழிந்தன அந்த நாட்கள். அமைதியான அந்த இரவில் வண்டுகளின் ரீங்கார ஒலிகளும், சில பறவைகளின் இடைவிட்ட ஓசைகளும் அந்த விமானத் தளத்தைச் சூழ கேட்டுக் கொண்டிருந்தன. இந்த அமைதியைக் குலைக்காதவாறு அவர்கள் அந்தப் படைத்தளத்தின் தடைவேலியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு கரும்புலி வீரனும் தான் தாக்குதல் நடாத்தும் விதத்தை மனதில் ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தான்.அப்போது தலைவர் அவர்கள் இறுதியாகச் சொல்லிவிட்ட வரிகள் ஞாபகத்திற்கு வந்தன.

“நீங்கள் 21 பேரும் போறியள். நிச்சயம் நிறையச் சாதிப்பீங்கள். எங்களாலையும் செய்யமுடியும் எண்டதை உலகத்துக்கு நாங்கள் காட்டுவோம். உங்கட பேரை நாங்கள் சொல்லத் தேவையில்லை. இந்த உலகம் கட்டாயம் உங்கட பேரை உச்சரிக்கும்.” தலைவரின் உணர்வை அவர்கள் நன்கு புரிந்தவர்கள். தலைவருடன் கூடவிருந்து வாழ்ந்தவர்கள்.அவரின் ஒவ்வொரு அசைவினதும் அர்த்தத்தையும் தெளிவாக புரிந்து வைத்திருந்த அந்த வீரர்கள் தலைவரைப் பார்த்து தாங்கள் சாதிப்போம் என்ற உறுதிமொழியை முகத்தில் பூத்த புன்னகைமூலம் காட்டினார்கள்.

அந்த இடத்தில் “அண்ணை தேசிய கொடியைக் கொண்டு போகட்டுமா?” என இளம்புலி கேட்டான்.“நீங்கள் கொண்டுபோகலாம். அதுக்குத் தடையில்லை. ஏனெண்டா இது முற்று முழுதான இராணுவத் தளம். நீங்கள் உங்கட உச்ச வீரத்தை காட்டுங்கோ. ஆனால் ஆரும் அதிகாரியளின்ர பிள்ளையள் சிலநேரம் அங்க நிக்கக்கூடும். தாக்குதல் நடத்தேக்குள்ள அவைய பத்திரமா அகற்றி அவையளுக்கு ஒன்றும் நடக்காம பார்த்துக் கொள்ளுங்கோ.” தலைவரின் கவனம் அவர்களுக்குப் புரிந்தது.

உண்மையில் சிங்களப் படைகளைப் போல் பிணந்தின்னிக் கழுகுகளாக அவர்கள் செல்லவில்லை. அவர்களின் ஓரே மூச்சு, சுதந்திரமான தேசம் தான். அதற்காகத்தான் இவர்கள் வெடிசுமந்து போனார்கள். இந்தக் கரும்புலி அணிக்குள் மூன்று பெண் கரும்புலிகளும் இருந்தார்கள்.அவர்களில் அறிவுமலர் என்ற பெண் கரும்புலி மிகவும் இரக்க சுபாவமுடையவள். பயிற்சி நாட்களில் இவளின் தங்ககத்தில் ஒருநாள் தலைக்கு அணியும் சீருடை தொப்பிக்குள் எலிக்குஞ்சுகள் கீச்சிட்டுக்கொண்டிருந்தன. எலிக்குஞ்சுகளை இவர்கள் கண்டு விட்டதால் அச்சமடைந்த தாயெலி அங்குமிங்கும் ஒடியபடியிருந்தது. கூட இருந்தவர்கள் அதை வெளியில் விடுவோமென ஆலோசனை சொன்னார்கள்.

ஆனால் அவள் மறுத்துவிட்டாள். அதை இருந்த இடத்திலேயே வைத்துவிட்டாள். தாயெலி அதை ஒவ்வொன்றாக வாயில் கவ்வி இன்னொரிடத்திற்கு கொண்டு சென்றது. கடைசி எலிக்குஞ்சை தாயெலி காவிச் செல்லும்வரை அவள் காவலிருந்தாள்.இத்தனை மென்மையான உள்ளங்களிலிருந்து எதிரிகளை அழிக்க வேண்டுமென மனவலிமை பிறக்கின்ற தென்றால் சிங்களதேசம் எத்தகைய கொடுமைகளை எங்கள் மீது புரிந்திருக்கிறது.

நேரம் விடிகாலை 3.00 மணி அமைதியாயிருந்த அந்த தளத்தில் தங்களுக்கு சாதகமான இடத்தில் தடையை அகற்றுவதற்காக தடைவேலியை கரும்புலிகள் அணி நெருங்குகின்றது. கரும்புலி வீரர்கள் சிலர் தங்கள் சீருடையிலிருந்த பைகளைத் தட்டிப் பார்க்கின்றார்கள்.இவர்கள் வன்னித் தளத்திலிருந்து புறப்படுவதற்கு முதல் நாள் இரவு நடவடிக்கைகான தளபதியை அவசர அவசரமா அழைத்த தலைவர் “பெடியள் வெளிக்கிட்டிட்டாங்களா?” என்று கேட்டார்.

“இல்லையண்ணை. இனித்தான்…”“அப்பிடியெண்டா அவங்களிட்டச் சொல்லுங்கோ கடைசியா முகாமுக்குள்ள இயங்கேக்கையும் பொக்கற்றில சொக்கிலேற்றுகளைக் கொண்டுபோகச் சொல்லுங்கோ. இவங்கள் கடைசி நேரம் விட்டிட்டுப் போடுவாங்கள். பிறகு நீண்டநேரம் சண்டை பிடிச்சா களைச்சிடுவாங்கள். ஆனபடியா மறக்காம கொண்டுபோகச் சொல்லுங்கோ.”

அந்த வீரர்கள் புறப்பட்ட கணம் முதல் தலைவர் அந்த வீரர்கள் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தார். பெரும் இலட்சிய நெருப்பைச் சுமந்து செல்லும் அந்த வீரர்கள் உச்சமான சாதனை புரிந்துதான் இந்த மண்ணில் வரலாறாக வேண்டுமென அவர் துடித்துக் கொண்டிருந்தார்.அதை நன்கு புரிந்து வீரர்கள் இங்கே சாதிக்கும் கணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள். அநுராதபுர வான்படைத் தளத்தைச் சூழ கோயில் திருவிழாபோல் வெளிச்சம் போடப்பட்டிருந்தது. ஆனால் அந்த வெளிச்சத்தில் மிகவும் அமைதியாக எழிலின்பனும் பஞ்சீலனும் தடையை நெருங்குகின்றார்கள். வேகமாக தங்களிடமிருந்த கம்பி வெட்டும் கருவியால் தடையை வெட்டத் தொடங்குகின்றார்கள். அவர்களிலிருந்து 15 மீற்றரில் இளங்கோ நிலையெடுத்திருந்து அணிக்கான கட்டளைகளைப் பிறப்பித்துக்கொண்டிருந்தான்.

அன்புக்கதிரும் புரட்சியும் தடை அகற்றும் பகுதிக்கு அண்மையாக இருந்த காப்பரணை நோக்கி தங்கள் இரவுப் பார்வைச் சாதனம் பொருத்தப்பட்ட ஆயுதத்தால் குறிபார்த்தபடியிருந்தார்கள் அவர்களின் குறிக்காட்டிக்குள்ளால் அந்த காவலரணில் இருந்த விமானப்படைச் சிப்பாயின் முகம் தெரிந்தது. ஆனால் அவன் இவர்களைப் பார்க்க மனமில்லாதவன் போல் எங்கோ பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனுக்குத் தெரியாமல் இங்கே அதிவேகமாய் தடை வெட்டப்பட்டுக் கொண்டிருந்தது.வான்படைத்தளத்தின் பாதுகாப்புக் கருதி எதிரி அதிக தடைகளை ஏற்படுத்தி இருந்தான். கம்பிவலை வேலி, பட்டுக்கம்பி வேலி, முட்சுருள், கண்ணிவெடிகள் என ஏராளமான தடைகள். தாங்கள் தளத்தில் பயிற்சி செய்தபடி, பயிற்சியை விடவும் வேகமாக தடையை அகற்றிக்கொண்டிருந்தார்கள்.

தடையில் மின் பாய்ச்சல் இருக்கின்றதா இல்லையா என்பதையும் உறுதிப்படுத்திக் கொண்டார்கள். குறுகிய நேரத்தில் தடை அகற்றப்படுகின்றது. தடை அகற்றப்பட்டதற்கான சைகையை இளங்கோவிற்கு வழங்க திறக்கப்பட்ட பாதைக்குள்ளால் அணிகள் வேகமாக உள்நுழைகின்றன. இப்போது அவர்கள் சாதிப்பது உறுதியாகிற்று. எல்லோர் முகங்களிலும் மகிழ்ச்சிப் பிரகாசம். தங்கள் கனவு நிறைவேறப் போவதற்கான ஆனந்தச் சிரிப்பு. இளங்கோ கட்டளை மையத்துடன் தொடர்பெடுக்கின்றான். “நாங்கள் இறங்கப்போறம். இப்ப தொடர்பிருக்காது.
விமானத்தளத்தின்ர மையத்துக்குப்போன பிறகுதான் தொடர்பெடுப்பன்.” இளங்கோ நிலைமையைச் சொல்லி விட்டு அணியுடன் உள்நுழைகின்றான். நடப்பதை சற்றும்புரியாத விமானப் படைத்தளம் அமைதியாகவே கிடந்தது. அன்று இரவு பயிற்சி விமானமும், பீச்கிறாவ்ற்றும் வந்து இறங்கியதாக மிகுந்த மகிழ்ச்சியோடு கட்டளைப் பீடத்திற்கு தெரியப்படுத்தினார்கள்.நடக்கப்போவதை அறியாத அந்த விமானம் எரிபொருள் தாங்கி முழுவதும் எரிபொருள் நிரப்பியபடி பற்றி எரிவதற்குத் தயாராயிருந்தது. உள்நுழைந்த அணி அங்கிருந்த கிறவல் மண்புட்டியை தாண்டும் போதுதான் காவலில் இருந்த சிப்பாய் முகாமில் மனித உருவங்களைப் பார்த்துத் திகைத்து நின்றான். பயப்பீதியால் “டோ… டோ…” என்று அவன் கத்தத் தொடங்கினான். சுமார் இரண்டு நிமிடங்கள் வரை எதிரிச்சிப்பாய் கத்தித் தொலைத்தான்.

அத்தோடு அங்கு நிலவிய நிசப்தத்திற்கு முற்றுப்புள்ளி கிடைக்கிறது. சுபேசனின் ‘லோ’ முழங்கியது. காவலரணில் பட்டு பெருமோசையோடு அது வெடித்துச் சிதறியது. கரும்புலிகளின் வீரசாகசம் சிங்களத்தின் கோட்டையான அநுராதபுரத்துக்குள் தொடங்கியது.எதிரி நிலைகளைத் தகர்த்தபடி வேகமாக அணிகள் உள்நுழைகின்றன. இளங்கோ வேகமான முறையில் கட்டளைகளைப் பிறப்பிக்க கரும்புலி வீரர்கள் தங்கள் இலக்குகளை நோக்கி தங்கள் உடலில் சுமந்த நவீனகரமான வெடிபொருட்களோடும் ஆயுதங்களோடும் ஓடிக் கொண்டிருந்தார்கள். சமநேரத்தில் வன்னியில் விடுதலைப் புலிகளின் வான்படைத்தளத்தில் அச்சமென்றால் எதுவென்று தெரியாது, எப்போதும் எதற்கும் துணிந்த வானோடிகள் தங்கள் இலகுரக விமானத்திலேறி அநுராதபுர வான்படைத்தளத்தை நோக்கி விரைந்தார்கள்.

வீமன் தனது அணியை அழைத்துக் கொண்டு எம்.ஐ.24ரக உலங்கு வானுர்தி தரிப்பிடம் நோக்கி முன்னேறினான். இளங்கோ மற்றைய அணியை அழைத்துக்கொண்டு பிரதான விமானத்தரிப்பு கொட்டகையை நோக்கி ஓடினான். இளங்கோ தானும் சண்டையிட்டபடி அணியையும் வழிநடத்தினான். எந்தவித பதட்டமுமில்லாமல் மிகவும் தெளிவான முறையில் இளங்கோவின் குரல் ஒலித்துக்கொண்டிருந்தது.சண்டையென்றால் சோளம் பொரி சுவைப்பதுபோன்ற உணர்வவனிற்கு. பதட்டமென்றால் என்னவென்று இளங்கோ புத்தகத்தில்த்தான் படித்தறிய வேண்டும். அனுபவத்தில் அதைப்பற்றி அவனுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. எத்தனை சண்டைக் களங்களில் எதிரியைப் பந்தாடியவன்.

வன்னியில் நடந்த புகழ்பெற்ற சமர்களிலெல்லாம் அவனின் துப்பாக்கி முழங்கியிருக்கின்றது. ஓயாத அலைகள் – 3 நடவடிக்கையில் ஜெயசிக்குறுப் படையை விரட்டியடித்த பெருஞ் சமரில் ஒட்டுசுட்டானிலிருந்த கட்டைக்காட்டுப் பாலத்தை சிங்களப் படைகளிடமிருந்து மீட்பதற்காக எதிரிப்படை மீது அதிரடியாய்ப் புகுந்து எதிரிகளை மண்ணில் புரளவைத்து கட்டைக்காட்டுப் பாலத்தை எல்லோரும் வியக்கும்படி கைப்பற்றியவன் இந்த இளங்கோ.இத்தாவில் சமர்க்களத்தில் பெண் போராளிகளின் நிலைகளை ஊடறுத்து உள் நுழைந்த கவசப்படை கவசவண்டிகள் மீது துணிகர தாக்குதலை மேற்கொண்டு ஒரு பவள் கவசவாகனத்தை மடக்கிப் பிடித்து அதிலிருந்த எதிரிமீது தாக்குதலைத் தொடுத்து மின்னல் வேகத்தில் அந்த பவள் கவச வாகனத்தில் பாய்ந்து ஏறி அதில் பூட்டப்பட்டிருந்த 50 கலிபர் துப்பாக்கியைக் கைப்பற்றி அதிலிருந்தபடியே எதிரியைத் தாக்கி பெரும் சாகசம் நிகழ்த்திய இளங்கோ இந்தக் களத்திலா அசைந்து கொடுப்பான்?

அநுராதபுர படைத்தளம் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் அதிர்ந்துகொண்டிருந்தது. பெரும் இறுமாப்போடு நீண்ட தடைகளையும் மண் அணைகளையும் காவல்நிலைகளையும் அமைத்து விட்டு ‘முடிந்தால் புலிகள் புகுந்து பார்க்கட்டும்’ என்று நினைத்திருந்த எதிரிகளுக்கு ‘முடிந்தால் தடுத்துப் பார்க்கட்டும்’ என்ற சவாலோடு கரும்புலிகள் விமானங்களை நோக்கி ஓடினார்கள்.இந்த விமானங்கள் மீது எத்தனை கோபம் அவர்களுக்கிருந்தது. எங்கள் தாய் நிலத்தில் எங்கள் பிஞ்சுக் குழந்தைகள் தசைத் துண்டுகளாய் சிதறவும், எங்கள் தாய்க்குலம் ஓவென்று கதறி அழுவதற்கும் தினம் தினம் சாவின் வாடையே எங்கள் தாய் நிலத்தின் வாசல்களில் வீசுவதற்கும் கொடிய எதிரிக்கு உதவுவது இந்த விமானங்கள் தானே.

இந்த விமானங்களை அழிப்பதால் சிதையப்போவது விமானங்கள் மட்டுமல்ல, சிங்கள அரசினதும் அதன் படையினதும் ஆக்கிரமிப்பு ஆசை நிறைந்த போர்வெறிக் கனவுந்தான்.

சண்டை தொடங்கி கொஞ்ச நேரத்திற்குள் விமானத்தளத்தில் நின்ற விமானங்கள் பெருமோசையோடு வெடித்துச்சிதறி எரிந்து கொண்டிருந்தன. தங்களைக் காக்கமுடியாத ஆற்றாமையோடு கரும்புலி வீரர்களுக்குக் கட்டுப்பட்டு அவை கவனமாக சொன்னதைச் செய்யும் கிளிப்பிள்ளை போல எரிந்து கொண்டிருந்தன. அந்த விமானங்களைப் பாதுகாக்க வேண்டியவர்கள் எங்கள் தேசத்தின் புயல்களின் வீச்சில் அகப்பட்டு செத்துவீழ்ந்திருந்தார்கள். எஞ்சியோர் அந்தத் தளத்தை விட்டே ஓடித்தப்பினார்கள்.அந்த விமானப் படைத்தளத்தின் ஓடுபாதையின் இடது புறமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எம்.ஐ – 24ரக உலங்கு வானுார்தியை நெருங்கிய வீமனின் அணி அந்த உலங்குவானுார்தி மீது தாக்குதலைத் தொடுக்கின்றது.

சிங்களப் படையின் பலம்மிக்க உலங்குவானுர்தியான எம்.ஐ-24 ஒன்று வெடித்துச் சிதறியபடி எரிந்துகொண்டிருக்கின்றது. மற்றைய எம்.ஐ-24 உலங்குவானூர்தி மீது தாக்குதல் தொடுத்தபோதும் அது சேதமாகிக்கொண்டே இருந்தது.பற்றி எரியவில்லை. அதன் மீது தொடர்ச்சியாக வீமனின் அணி தாக்குதலை தொடுத்தது. இந்தக் கணத்தில் சிங்களப் படையால் விமானத்தளத்தை நெருங்கவே முடியவில்லை. அவர்களின் கண்முன்னாலேயே அவை வெடித்து பெரும் தீப்பிழம்பை வீசியபடியும் கரும்புகையை கக்கியபடியும் எரிந்துகொண்டிருந்தன.

மறுபக்கம் இளங்கோ பிரதான விமானத் தரிப்பு கொட்டகையை நோக்கி தனது மற்றைய அணியை சண்டையிட்டபடி நகர்த்தினான். அந்த கொட்டகை மீது கருவேந்தன் ‘லோ’ வால் தாக்க அங்கிருந்த விமானங்கள் தீப்பற்றத் தொடங்கின. அவர்கள் விமானக் கொட்டகையையும் ஒடுதளத்தில் தரித்து நின்ற விமானங்கள் மீதும் தாக்க அவையும் தீப்பற்றி எரியத் தொடங்கின.அநுராதபுர வான்படைத்தளத்தினுள் எதிரியின் விமானங்களுக்குத் தங்கள் உடலில் சுமந்து வந்த வெடி பொருட்களால் தாக்கி அவை எரியும் காட்சியை ஆனந்தத்தோடு பார்த்தபடி நிலைமையை வன்னியிலுள்ள கட்டளைப் பீடத்திற்கு அறிவித்தான் இளங்கோ.

“என்னண்டா வீமனாக்கள் எம்.ஐ-24 ஒண்டை எரிச்சிட்டாங்கள். மற்றது தாக்கி சேதப்படுத்தியிருக்கு அது எரியேல்ல. இஞ்சால என்ர பக்கம் ஒரு கே-8 விமானமும் இன்னுமொரு விமானத்தையும் ரண்வேயில தாக்கி எரிச்சிருக்கிறம். பெரிய கங்கருக்குள்ள நிற்கிற விமானங்களுக்கு அடிச்சிருக்கிறம். தொடர்பில நில்லுங்கோ பார்த்து அறிவிக்கிறன்.” கட்டளை மையத்திற்கு இளங்கோ நிலைமைகளை தெரியப்படுத்திக் கொண்டிருக்கிறான்.சண்டை தொடர்ந்து கொண்டிருந்தது. அந்த வான்படைத் தளத்துள் நடந்த தொடக்கச் சண்டையின் போது உள்ளிருந்த எதிரிகளின் தடைகளை தகர்த்தெறிந்து எழிலின்பன், பஞ்சீலன், சுபேசன், ஆகியோர் தங்களுக்குத் தரப்பட்ட பணியை சரிவர நிறைவேற்றிய திருப்தியோடு வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர்.

கரும்புலிகளின் நெஞ்சில் எரிந்த விடுதலைத் தீயின் ஒளிப்பிழம்புகள் அந்த விமானத் தளத்தை சுட்டெரித்துக் கொண்டிருந்தன. சிங்களப் படைகளால் துளியளவேனும் கரும்புலி வீரர்களின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. அவர்கள் எத்தனைதான் முயன்றாலும் விமானத்தளம் கரும்புலி வீரர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. முன்னேறிய படையினர் அடித்துவிரட்டப் பட்டனர்.சமாதானம் என்ற மாயையைக்காட்டி எங்கள் விடுதலைப் போரை சிதைத்து விட சிங்களத் தேசம் மும்முரமாக ஈடுபட்டபோது, இவர்கள் எந்த நொடிப்பொழுதும் கரும்புலியாகி எதிரியின் குகைக்குள் புகுந்து பகைவனுக்கு பெரும் சேதம் விளைவித்து தலைவனுக்கு பலம் சேர்க்க காத்திருந்தார்கள்.

தலைவரோடு கூடவிருந்து அவரின் சுமைகளைத் தாங்கியவர்கள். அந்த உணர்வோடுதான் எதிரியின் கற்பனைகளைச் சிதைத்துவிட்டு மீண்டும் இங்கு போர்மேகம் கருக்கொண்டபோது கரும்புலியாய் பிறப்பெடுத்தார்கள். தங்கள் இலக்கை அழித்தொழிக்கும் அந்த நாளுக்காக அவர்கள் எத்தனை இரவுகள் காத்திருந்தார்கள்.அவர்களின் நெஞ்சில் பிறந்த விடுதலைப்பற்று இன்று அநுராதபுரத்து வான்படைத் தளத்தை சிதைத்துக் கொண்டிருந்தது. அநுராதபுர வான்படைத்தளத்தின் மையத்தில் நின்று விமானத்தளத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தபடி விமானங்கள் நிற்கும் திசைகளுக்கு கரும்புலிகளை நகர்த்தினான் இளங்கோ. வீமன் மறுபுறத்தே நின்றபடி தனது அணியை வழிநடத்தினான். இந்த வீரர்களை எதிர்த்துச் சமரிடும் திறன் சிங்களப் படைக்கு எங்கே இருக்கின்றது? வீமன் தலைவருக்கு நெருக்கமாக நின்று பணிபுரிந்தவன்.

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் மெய்க்காவலர் அணிக்குப் பொறுப்பாக நின்று செயற்பட்டவன். அந்தப் பெரு மனிதனின் மனதைப் புரிந்து அவரோடு இசைந்துபோய் அவரின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதில் வல்லவனாயிருந்தான் வீமன். ஆனால் பாதுகாப்பு நடைமுறைகளில் அவன் தளர்வு காட்டியதில்லை. தேசத்தின் குரல் பாலா அண்ணன் அவர்கள் இங்கு வந்தால் அவர் கேட்பது வீமனைத்தான்.அத்தனை பற்றும் பாச உணர்வும் வீமனிடத்தே அவருக்கிருந்தது. அந்த வீமன்தான் இன்று அநுராதபுர வான்படைத்தளத்தை அதிரவைத்துக் கொண்டிருந்தான். தங்கள் தீரம் மிகு செயல்களால் விடுதலைப் போருக்குப் பலம் சேர்த்த கரும்புலி வீரர்கள் சிலர் தங்கள் உடலோடு சுமந்து வந்த வெடிபொதியை வெடிக்க வைத்து தங்களை இந்தத் தேசத்திற்காக அர்ப்பணித்துக்கொண்டிருந்தனர்.

நெஞ்சிலே காயமடைந்த காவலன் அணித்தலைவன் இளங்கோவிடம் அனுமதி பெற்றபின் தன் மார்போடு பொருத்தப்பட்டிருந்த கந்தகப்பொதியை வெடிக்க வைத்து காற்றோடு கலந்து போனான். அநுராதபுர வான்தளத்தில் அந்த வீரர்கள் மூட்டிய தீ பிரகாசித்து எரிந்து கொண்டிருந்தது. களத்தில் நின்றபடி அணியை வழிநடத்திய இளங்கோ காயமடைந்தான். அவனால் நகரமுடியவில்லை தனது காயத்திற்கு கட்டுப்போட்டு விட்டு அவன் தெளிவாக கட்டளைகளை வழங்கிக்கொண்டிருந்தான்

 அந்தக் கரும்புலிகளுள் ஒரிருவரைத் தவிர மற்றைய எல்லோரும் எதிரியின் குண்டுமழையால் வீர வடுவேந்திய போதும் அவற்றிற்குக் கட்டுப் போட்டுவிட்டு தொடர்ந்தும் சண்டையிட்டனர்.காயங்களின் வேதனை அவர்களை வாட்டவில்லை. சிங்களம் எங்கள் தேசம் மீது புரிந்த கொடுமைகளின் வடுக்கள்தான் அவர்களின் மனதை வாட்டிக்கொண்டிருந்தது. அதற்காகத்தான் இன்று எதிரியின் கோட்டைக்குள் முழக்கமிட்டுக் கொண்டிருக்கின்றார்கள். சிங்களப்படை மீண்டும் தங்கள் தளத்தை கைப்பற்ற முன்னேறுகின்றார்கள். இளங்கோ கட்டளை மையத்துடன் தொடர்பெடுக்கிறான்.

“என்னண்டா ட்ரக்கில வந்து இறங்கி அடிச்சுக்கொண்டு வாறாங்கள். நாங்கள் திருப்பித் தாக்கிறம்.”“நீங்கள் உங்கட ஆக்களை வச்சு நல்லாக் குடுங்கோ. எங்கட விமானங்கள் உங்களுக்கு துணையா இப்ப தாக்குதல் நடாத்துவினம்.” இளங்கோ கட்டளை மையத்துடன் தொடர்பிலிருந்தான். திடீரென முகாமைச் சூழ இருந்த எதிரிகளின் ஆயுதங்கள் வான்நோக்கி குண்டுமழையை பொழிந்தன.

உண்மையில் அப்போது வானத்தில் எமது விமானங்கள் தென்படவில்லை. எதிரியின் ராடார் திரையில் எமது விமானம் தென்படுவதாகத் தகவல் கிடைத்ததுமே பீதியால் கண்மண் தெரியாது சுட்டுக்கொண்டிருந்தார்கள்.
ஆனால் அவர்களின் இந்த இரைச்சல்களுக்கூடாகவே விடுதலைப் புலிகளின் திறன் வாய்ந்த வானோடிகள் தங்களுக்குத் தரப்பட்ட இலக்கின் மீது கனகச்சிதமாக குண்டுகளை வீசிவிட்டு மீண்டும் தளம் திரும்பிக்கொண்டிருந்தார்கள்.அநுராதபுர வான்தளத்தில் தரையாலும், வானாலும் கரும்புலிகள் தொடுத்த தாக்குதலால் சிங்களச் சிப்பாய்களும் அவர்களது அதிகாரிகளும் கதிகலங்கி போயினர். முன்னேறி வந்த சிங்களப் படையினர் எமது வான்படையின் வரவைக் கேள்வியுற்றதுமே ஒடித் தப்பிக் கொண்டனர். இளங்கோ இந்த நிலைமையை விமானத்தளத்தின் மையத்திலிருந்தபடி கட்டளை பீடத்திற்கு அறிவித்தான்.

எதிரியின் இலக்குகளை தகர்த்துக் கொண்டிருந்த செந்தூரன் காயமடைந்தான். அவனால் இனிச் செயற்பட முடியாத அளவு பாரிய காயம். அவன் இன்று நிறையவே சாதித்துவிட்டான். அவன் மனதில் நிறைந்த திருப்தியிருந்தது. அவன் புகழ்மணியிடம் தனது உடலில் பொருத்தப்பட்ட வெடிகுண்டை இயக்கிவிடும்படி பணிக்கின்றான்.

 அந்தக் கணத்தில் கரும்புலி வீரர்களின் மனத்தில் எழுந்த உணர்வை எப்படிச் சொல்வது? எத்தனை வருடங்களாக ஒன்றாக இருந்து ஒருவருக்கொருவர் துணையாக வாழ்ந்த வீரர்கள். இன்று பிரியப் போகின்றார்கள். ஆனாலும் சாதித்துவிட்டோம் என்ற பெருமிதத்தோடு அவனது ‘சார்ச்சை’ இழுத்துவிட்டான் புகழ்மணி. சில கணங்களில் செந்தூரன் இந்த தேசத்திற்காக அணுவணுவாக வெடித்து சிதறினான்.இளங்கோ தங்களால் அழிக்கப்பட்ட விமானங்களின் தரவுகளை சொல்லிக் கொண்டிருந்தான். அவற்றில் ஒன்றினது இலக்கத்தைக்கூட தெளிவாக பார்த்து அறிவித்துக் கொண்டிருந்தான்.

“என்னண்டா வீமன்ணையாக்கள் ஒரு எம்.ஐ-24ஐ முற்றா எரிச்சிட்டினம். ஓண்டு சேதத்தோட நிக்குது. அது அடிக்க அடிக்க எரியுதில்லை. என்ர பக்கம் ரக்சி வேயில ஒரு கே-8 எரிஞ்சு முடிஞ்சுது. அதவிடவும் இன்னொண்டும் வெளியில எரிஞ்சிருக்கு. பெரிய கங்கருக்குள்ள 3யூ.ஏ.வி உம் ஒரு பெல்லும் எரியுது. அதைவிடவும் உள்ளுக்க விமானங்கள் எரியுது. ஆனால் நெருப்பு எரிஞ்சு புகையா கிடக்கிறதால எங்களால பார்க்க முடியேல. விளங்கிற்றுதா?”“ஓமோம் விளங்கிற்று. நீங்கள் தொடர்பில நிண்டு நிலை

மையை அறிவிச்சுக்கொண்டிருங்கோ.”இளங்கோ சுற்றிவர எரிந்துகொண்டிருக்கும் விமானங்களுக்கு நடுவே காயம் அடைந்த படி சண்டையை நடாத்திக் கொண்டிருந்தான். இரவு வந்து இறங்கிய பீச் கிறாவ்ச் அந்தத் தளத்தில் இருந்த கோபுரத்தின் மறைவில் நின்றதை இப்போது தான் கண்டார்கள். உடனடியாகவே வீமன் தனது கிறனைட் லோஞ்சரால் அதன் மீது தாக்க அது பற்றி எரியத் தொடங்கியது. இப்போது கரும்புலிகளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. பீச் கிறாவ்ற் விமானம் மிகவும் பெறுமதிவாய்ந்தது. அத்தோடு மற்றைய விமானங்களைவிடவும் இது முக்கியமாக அழிக்கப்பட வேண்டுமென ஏற்கனவே சொல்லப்பட்டுமிருந்தது.

இளங்கோ கட்டளை மையத்துடன் மீண்டும் தொடர்பெடுக்கின்றான். “என்னண்டா இப்ப ‘பீச் கிறாவ்ற்’ ஒண்டை அடிச்சு எரிச்சிட்டம். புதுசா மினுங்கிக் கொண்டு நிண்டது. வெடிச்சுவெடிச்சு எரியிற சத்தம் உங்களுக்கும் கேக்குமெண்டு நினைக்கிறன்.?” இளங்கோ ஆனந்த பூரிப்போடு பீச் கிறாவ்ற் வெடித்து எரியும் சத்தத்தை தொலைத் தொடர்புக் கருவியூடாகக் கேட்குமாறு கட்டளைப்பீடத்திற்கு தெரிவித்துக் கொண்டிருந்தான்.சிங்களப் படையின் அந்தப் பெரும் விமானத்தளம் இப்போது கரும்புலி வீரர்களிடம் மண்டியிட்டுக் கொண்டது. இப்போது அங்கே கரும்புலிகள் நினைத்தது மட்டும்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. தங்களது விமானங்களைப் காப்பாற்றும் நப்பாசை சிங்களத்திடம் இருந்து இன்னும் போகவில்லை. எரிந்து கொண்டிருக்கும் விமானங்களையாவது காப்பாற்றுவோம் என எண்ணி அவர்கள் தீயணைப்பு வாகனத்தோடு விமானத்தளத்துள் நுழைந்தார்கள்.

அப்போது புகழ்மணி தனது பி. கே ஆயுதத்தால் அவர்கள் மீது தொடர்ச்சியான தாக்குதலை தொடுக்க அவர்களும் ஓடித்தப்பிக் கொண்டனர். ஆனாலும் தொடர்ச்சியாக வான் படைத்தளத்தின் எல்லையில் நின்றவாறு கரும்புலிகள் மீது தாக்குதலைத் தொடுத்துக் கொண்டிருந்தனர்.
இப்போது அந்தத் தளத்தில் பி.கே ஆயுதத்தைவைத்து சுட்டுக்கொண்டிருந்த புரட்சி காயமடைய அவன் தனது சார்ச்சை இழுத்துவிடுமாறு தர்மினியிடம் வேண்டிக்கொண்டான். அந்தக் கரும்புலி வீராங்கனை அந்த வீரனுக்கு கடைசி விடை கொடுத்து அவனது சார்ச்சை இழுத்து விட்டாள்.அந்த வீரனும் தனது தாய் தேசத்திற்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டான். அவனது பி.கே ஆயுதத்தை தர்மினி எடுத்து மதியிடம் கொடுத்தாள். மதிவதனன் இப்போது ஒரு கரும்புலி வீரனாயினும் அவனொரு கனரக ஆயுதப்பயிற்சி ஆசிரியர். எத்தகைய கனரக ஆயுதத்தையும் எடுத்தவுடன் கையாளும் திறன் வாய்ந்தவன்.

 அவன் உருவாக்கிய போராளிகள் இப்போதும் களங்களில் கனரக ஆயுதங்களுடன் நிற்கிறார்கள்.எந்த ஆயுதத்தையும் இலகுவாகக் கையாளும் அந்தக் கரும்புலி வீரன் வீரச்சாவடைந்த சகதோழனின் துப்பாக்கியை எடுத்து ரவைகளை பொழிந்து கொண்டிருந்தான். தர்மினி ஒரு துடிப்பான போராளி. அவளும் அந்தக் களத்தில் கண்ணில் காயமடைந்த போதும் தனது இயக்கத்தை அவள் நிறுத்திக் கொள்ளவில்லை.

தனது காயமடைந்த கண்ணிற்கு கட்டுப் போட்டுவிட்டு அவள் சண்டையிட்டுக் கொண்டிருந்தாள். புலிமன்னனும் கடும் காயத்திற்குள்ளானான். அவனிற்கு இடுப்பிற்கு கீழ் இயலாமல் போனது. அவனால் நகர முடியாது போனாலும் பெரும் மனவுறுதியைக் கொண்ட அந்த வீரன் தனது பி.கே ஆயுதத்தால் தொடந்தும் சூடுகளை வழங்கிக் கொண்டிருந்தான்.அநுராதபுர வான்படைதளம் எங்கும் பெரும் தீயின் வெளிச்சம். துப்பாக்கி வேட்டுக்களினதும் குண்டுகளினதும் காதை கிழிக்கும் வெடியோசைகள். இவற்றிற்கு நடுவே நின்ற படி கரும்புலிகள். தொடர்ந்தும் சண்டையிட்டார்கள். அந்த தளத்தை சூழ இருந்த சிங்கள விமானப்படையால் எதுவும் முடியாது போக தங்கள் ஆற்றாமையால் மன்னாரிலிருந்தும், வவுனியாவிலிருந்தம் விசேட படை அணிகளை அநுராதபுரத்திற்கு அழைத்தனர்.

இப்போது அந்தத் தளத்தில் சண்டை இன்னும் வலுவுற்றது. எஞ்சியிருந்த கரும்புலி வீரர்கள் மூர்க்கமாகச் சமரிட்டார்கள்.
இளங்கோவிற்கு மீண்டும் இருமுறை காயம் ஏற்படுகின்றது. அந்தக் காயத்தின் வலியையும் கடந்து அவன் நிதானமாக கட்டளை மையத்துடன் தொடர்பெடுக்கிறான்.“எனக்கு திரும்பவும் ரெண்டிடத்தில காயம் வந்திட்டுது. நான் எனக்கு தந்த கடமையை சரியாச் செய்திருக்கிறன். அண்ணையிட்டச் சொல்லுங்கோ. நான் என்ர அணியோட சேர்ந்து சாதிச்சிட்டனெண்டு. நீங்கள் எல்லோரும் அண்ணையை கவனமா பார்த்துக் கொள்ளுங்கோ.

 அண்ணைதான் எங்களுக்கு முக்கியம். என்ர நண்பர்களிட்ட சொல்லுங்கோ நான் என்ர கடமையைச் சரியாக செய்திருக்கிறன் எண்டு. இனி நீங்கள் தான் அண்ணைக்கு நிறையச் செய்து குடுக்க வேணுமெண்டு சொல்லுங்கோ…”இந்த வார்த்தைகளோடு இளங்கோவின் குரல் அடங்கிப்போகிறது.அதன் பின் அவன் குரலை கேட்க முடியவில்லை. சற்று முன்தான் வீமனும் அந்த அநுராதபுர தளத்துள் வெடித்து சிதறி வரலாறான செய்தியை இளங்கோ சொல்லியிருந்தான். இளங்கோ அந்த அணியை வைத்து நிறையவே சாதித்து விட்டான். தலைவர் நினைத்ததை விட அதிகமாய் அவன் சாதித்துவிட்டான். தனது மனதில் எத்தனை பெரும் சுமைகளை அந்த வீரன் இன்று வரை சுமந்திருக்கிறான். சமர்க்களங்களில் எத்தனை அர்ப்பணிப்புக்களை கண்டிருக்கிறான். அதன் பதிவுகள் அவனது நாட்குறிப்பில் இப்படியிருக்கின்றது…

‘கடும் சமர் மத்தியிலேயே தலையில் காயம் பட்டு வார்த்தைகள் வெளிவர முடியாத நிலையிலேயே என் மடியில் தலைவைத்தபடியே என்னைக்கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துவிட்டு என் கரம் இறுகப்பற்றியபடியே என் மடியினிலே உயிர்விட்ட உயிர்த்தோழன் மேஜர் மனோவை என் கண்ணால் பார்த்திருக்கிறேன்.’‘ஊடறுப்புச் சமருக்காக நெஞ்சுமுட்ட நீருக்குள்ளால் நகர்ந்து கொண்டிருந்த போது எதிரியின் சரமாரியான செல் மழையில் மார்பில் காயப்பட்ட பெண் போராளி குப்பி கடிக்க முற்பட்ட போது குப்பியை பறித்துவிட்டு ஒரு கிலோ மீற்றர் தூரம் நீருக்குள்ளால் தோளில் காவிச் சென்று கரை சேரும் போது என் தோளிலேயே உயிர் பிரிந்த பெண் போராளியைப் பார்த்து இருக்கின்றேன்.’இது அவனது குறிப்பு பொத்தகம் சொன்ன அவனின் உணர்வுகள்.

 இந்த உணர்வுகளைச் சுமந்து தானே இன்று அவன் சமரிட்டான். அவன் மட்டும் என்ன 21 கரும்புலி வீரர்களும் இப்படிப் பட்ட உணர்வுகளை சுமந்து தானே இன்று கரும்புலியாக உருவாகியிருந்தார்கள்.அந்த உன்னத வீரர்களின் இலட்சிய தாகத்தின் முன்னாலும் அசையாத மனவுறுதியின் முன்னாலும் நெஞ்சை நிமிர்த்திய வீரத்தின் முன்னாலும் சிங்களக் கூலிப்படைகளால் எப்படி தாக்குப் பிடிக்க முடியும்? அந்த உன்னத வீரர்களை எதிர்கொள்ளும் துணிவு இவர்களுக்கு எங்கே இருக்கின்றது?

எதிரிகள் கலங்கி நிற்க ஆச்சரியத்தோடு வியந்து நிற்க எஞ்சியிருந்த ஒவ்வொர கரும்புலி வீரனும் மூர்க்கமாக போராடினான். விடிகாலை 3.20 மணிக்கு தொடங்கிய சண்டை காலை 9.00 மணிவரையும் தொடர்ந்த போதும் சிங்களப் படையால் உள்நுழைய முடியவேயில்லை. கடைசியாக கவச வாகனங்களை கொண்டு வந்து பெரும் குண்டு மழை பொழிந்துதான் அவர்களால் தங்கள் வான் படை தளத்தினுள் நுழைய முடிந்தது. அப்போது தங்களுக்கு தரப்பட்ட பணியை கரும்புலி வீரர்கள் உச்சமாக நிறைவேற்றி முடித்து வீரச்சாவை அணைத்திருந்தார்கள்.சிங்கள தேசம் தனது ஆற்றாமையின் வெளிப்பாடாய் தங்கள் கோபங்களை கரும்புலி வீரர்களின் வித்துடலில் தான் தீர்த்துக்கொண்டது. பாவம் சிங்களப் படைகள். சிங்கத்தின் வழிதோன்றல்களுக்கு நாகரீகம் பற்றி புரிந்திருக்க நியாயமில்லை தான். ஆனால் கரும்புலிகள் வென்று விட்டார்கள்.

தலைவர் சொல்லி விட்டது போல வெற்றி பெற்ற அவர்களின் உன்னத அர்ப்பணிப்பால் உலகமிப்போது அவர்களின் பெயரை உச்சரிக்கின்றது. சிறீலங்காவின் ஜனாதிபதியான மகிந்த ராஜபக்சவை நவீன துட்டகைமுனுவாகச் சித்தரித்தபடி ஆழிக்கூத்தாடிய சிங்களத்தின் மீது, நவீன எல்லாளனாக புகுந்து அவர்களின் துட்டகைமுனு கொட்டத்தை அடக்கி முறித்தது எறிந்திருக்கிறார்கள்.அந்த வீரர்கள் தனியே அநுராதபுர வான்படைதளத்திற்கும் மட்டும் தீ மூட்டவில்லை. பெரும் விடுதலை தீயை பலநூறு போராளிகளின் இதயங்களில் மூட்யிருக்கிறார்கள். நிச்சயமாய் இனிவரும் களங்களில் அவர்கள் சிங்களத்தின் தலையில் பேரிடியாய் இறங்குவார்கள்

அனுராதபுர மண்ணில் பகைவரின் வானூர்திகளை அழித்து வன்னி முற்றுகைக்கான முதலடியைக் கொடுத்த இந்த வீரமறவர்களின் தியாகத்தை வீண்போகாமல் காக்கப்பட வேண்டும். எல்லாளன் நடவடிக்கையில் வீரச்சாவடைந்த கரும்புலிகளுக்கு எங்கள் வீரவணக்கம்.

ஒரு மணித்தியால நேர இடைவெளிக்குள் மூன்று கிலோ மீற்றர் நீளத்தையும் இரண்டரைக் கிலோ மீற்றர் அகலத்தையும் கொண்ட அனுராதபுரம் பாரிய விமானப்படைத்தளத்தினை கரும்புலிகள் அணியினர் வெற்றிகரமாக தாக்கி தமது முற்றுமுழுதான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். அப்போது விடுதலைப் புலிகளின் வான்படையினரின் இரண்டு வானூர்திகள், அனுராதபுரம் வான்படைத்தளத்தினுள் உள்நுழைந்து இரண்டு குண்டுகளை வீசி அப்படைத்தளத்திற்கு மேலும் பாரிய சேதங்களை ஏற்படுத்தின.

அந்த வான்படை தளத்துக்கு உதவி புரிவதற்காக வவுனியாவில் இருந்த அனுப்பப்பட்ட பெல்-212 உலங்குவானூர்தியானது மகிந்தலைப் பகுதியில் வானூர்தி எதிர்ப்பு ஆயுதத்தினால் சுட்டு வீழ்த்தப்பட்டனர். அதில் பயணம் செய்த நான்கு வான்படையினர் உலங்குவானூர்தியுடன் வீழ்ந்து உடல் சிதறிப் பலியாயினர்.

இந்த தாக்குதல்களின் போது சிறிலங்கா வான்படையின் எட்டு வானூர்திகள் அழிக்கப்பட்டதாக முதலில் செய்திகள் வெளிவந்தாலும் தற்போது கிடைக்கும் நம்பகமான தகவல்களின் படி 18 வரையிலான வானூர்திகள் அப்படைத்தளத்தின் மீதான தாக்குதலின் போது அழிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.இது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் செனிவிரட்ன கடந்த 24 ஆம் நாள் புதன்கிழமை ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்த கருத்துக்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அதாவது 660 கோடி ரூபா பெறுமதி வாய்ந்த 18 வானூர்திகள் முற்று முழுதாக அழிக்கப்பட்டு அல்லது சேதமாக்கப்பட்டு விட்டதாக அவர் தெரிவித்திருந்தார்.

அதாவதுஎம்.ஐ-24 உலங்குவானூர்திகள்- 02

எம்.ஐ-17 உலங்கு வானூர்தி – 01பெல்-212 – 01

பீச் கிராப்ட்- 01,மு-8 பயிற்சி வானூர்தி – 01

Pவு-6 பயிற்சி வானூர்தி – 0ஆளில்லா வேவு வானூர்தி – 03

செஸ்னா வானூர்தி – 06ஆகியன இத்தாக்குதலின் போது புலிகளினால் அழிக்கப்பட்டதாக தெரிவித்த செனிவிரட்ன இது தவிர மேலும் மூன்று வானூர்தி அழிக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான விபரங்கள் கிடைக்கப்பெற்றதும் வெளியிடப்படும் என்றும் லக்ஸ்மன் செனிவிரட்ன தெரிவித்தார்.

இத்தாக்குதல்களின் போது சிறிலங்காப் படையினர் 14 பேர் கொல்லப்பட்டதாகவும் 20-க்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் சிறிலங்கா அரச தரப்பினர் செய்திகளை வெளியிட்டிருந்தனர். கொல்லப்பட்டவர்களில் விங் கொமாண்டர் அமிலா மொகொட்டி, ஸ்குவார்டன் லீடர் ருவான் விஜயரட்ன மற்றும் இரண்டு பிளையிங் ஒபிசர்கள், நான்கு கோப்பரல்கள், இரண்டு லான்ஸ் கோப்பரல்கள் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.விடியும் வரை விழித்திருந்த அனுராதபுரம் மக்கள்

அனுராதபுர நகரமானது அதிகாலை 03:20 மணியில் இருந்தே குண்டு சப்தங்களாலும் துப்பாக்கி வேட்டொலிகளினாலும் அதிர்ந்துகொண்டிருந்தது. அந்நகர மக்கள் இச்சத்தங்களினால் நித்திரையில் இருந்து திடுக்கிட்டு எழுந்ததுடன் பயப்பீதி காரணமாக பின்னிரவு முழுவதும் விழித்திருந்தனர்.விடுதலைப் புலிகளின் இரண்டு வானூர்திகள் மிகவும் இரைச்சலுடன் தாழப்பறந்து குண்டுவீசியதை தாம் கண்டதாக பல மக்கள் செய்தி நிறுவனங்களுக்கு தெரிவித்திருந்தனர். மேலும் முகாம் பகுதியில் பாரிய நெருப்புக்கோளங்களையும் தீச்சுவாலைகளையும் கண்டதாக முகாமிற்கு அருகில் வசித்தவர்கள் தெரிவித்தனர்.

விமான படைத்தளம் அழித்து வெற்றிக்கு வித்திட்டு வீரத்துயில் கொள்கின்ற தேசத்தின் புயல்கள்………..

லெப்.கேணல் இளங்கோ
அவனது சாதுவான அந்தச் சிரிப்பு, அவனுக்குள்ளே குடியிருந்த எரிமலையின் மறுபக்கம். இம்ரான்-பாண்டியன் படையணியின் இரகசியமான சிறப்புப் பணியொன்றை ஆற்றிய சில ஆண்டுகாலப்பகுதியில் அவனது செயற்பாடுகள் பற்றி இங்கு விவரிக்க முடியாது. பின்னர் லெப்.கேணல் விக்ரர் கவச எதிர்ப்பு அணியில் இணைந்துகொண்டான். அவ்வணியில் இருந்து அவன் சாதித்துக் காட்டிய வீரம் வித்தியாசமானது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குடாரப்புத் தரையிறக்கத்தின் மூலம் உள்ளே நுழைந்த படையணியில் அவனது தலைமையிலும் ஓரணி கவச எதிர்ப்பு ஆயுதங்களுடன் களமிறங்கியிருந்தது. கேணல் பால்ராஜ் தலைமையில் நிலையெடுத்திருந்த விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்கும் நோக்குடன் பலமுனைகளில் முன்னேறிவந்த எதிரியுடன் கடும்சமர் இடம்பெற்றது.

எதிரியின் கவசவாகனத்தைத் தாக்கி அதிலிருந்த 50 கலிபர் துப்பாக்கியை கைப்பற்றி, அதன்மூலம் எதிரியின் மீதே தாக்குதலை நடத்திய இளங்கோவின் வீரம் அன்று அந்தச் சமர்க்களத்தை வெல்வதற்கு உறுதுணையாக அமைந்தது.

விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்த காலம் தொடக்கம், பல்வேறு சிறப்பு பணிகளில் ஈடுபட்டவன். ஆனால் ஒவ்வொரு பணியிலும் அவனது முழுமையான ஈடுபாடு இருக்கும்.

உள்ளகப் புலனாய்வுப்பணி தொடக்கம் ஊடுருவிதாக்குதல் வரை அவனது பணிகள் நீண்டவை. அவனது அந்த அனுபவங்களே எல்லாளன் நடவடிக்கைக்கான சிறப்பு அணியின் பொறுப்பாளனாக நியமிக்கப்படும் அளவுக்கு அவனைப் புடம்போட்டது.

சிறப்பு நடவடிக்கைகளைப் பொறுத்தவரை சிறிய அணிகளே பொருத்தமானவை. அதன் மூலமே சாதகமான மறைப்பை பயன்படுத்தி எதிரிக்குப் பேரழிவைக் கொடுப்பதுடன் – நெருக்கடியான நிலைமைகளின் கீழ் – அணியை ஒழுங்கமைப்பதும் இலகுவானது.

21 பேர் கொண்ட பெரிய அணியையும் அதற்குத் துணையான வேறு அணிகளையும் நெறிப்படுத்தி வழிகாட்டி பெருந்தலைவன் அளித்த பணியைச் சிறப்பாகவே அவன் முடித்து வைத்தபோது – சிங்கள தேசமே ஆட்டங்கண்டது.

லெப். கேணல் வீமன்…..
பாலா அண்ணை ஊருக்கு வந்தால் இவன்தான் அவருக்கு மெய்ப்பாதுகாப்பாளன். தேசியத்தலைவரின் மெய்ப்பாதுகாவலர் அணியில் சில ஆண்டுகள் பணியாற்றிய இவனை தலைவரேதான் பாலா அண்ணையின் பாதுகாப்பாளராக நியமித்தார்.
மிக இளவயதில் போராட்டத்தில் இணைந்த வீமன் தொடக்கத்தில் விடுதலைப் புலிகளின் படைத்துறைப்பள்ளியில் கல்வி பயின்றான். 1995 இன் இறுதிக்காலப்பகுதியில் – யாழ்.குடாநாட்டை முற்றாகக் கைப்பற்றவென சிறிலங்காப்படைகள் மும்முரமாக முயன்றுகொண்டிருந்த காலப்பகுதியில் படைத்துறைப்பள்ளியிலிருந்து சிறப்பு இராணுவப் பயிற்சிக்கெனத் தேர்வு செய்யப்பட்ட அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டான். அவனது சிறப்பு இராணுவப் பயிற்சிகள் தொடரமுடியாத வண்ணம் போர் நிலைமைகள் மாறின. புலிகள் யாழ்.குடாநாட்டை விட்டு வெளியேறி வன்னிக்கு வந்தபோது அவனது சிறப்பு இராணுவப் பயிற்சிகள் தற்காலிகமாகக் கைவிடப்பட்டன.

வன்னிக் காடுகளில் மாறிமாறி வெவ்வேறு வேலைத்திட்டங்களில் ஈடுபட்ட வீமனும் அவனது அணியும் மீண்டும் தமது சிறப்புப் பயிற்சிகளைத் தொடர்ந்தனர். பின்னர் வன்னியின் இறுதிப்போரில் வீரச்சாவடைந்த கேணல் வசந்தன் மாஸ்டரின் மேற்பார்வையில்தான் அப்போது வீமனும் அவனது அணியும் சிறப்புப் பயிற்சிகளைப் பெற்றனர். பல தற்காப்புக் கலைகள் உட்பட சிறப்புப் பயிற்சிகளைப் பெற்று அந்த அணி புடம்போடப்பட்டது.

இந்நிலையில்தான் தலைவரின் மெய்ப்பாதுகாப்புப் பணியில் வீமன் இணைத்துக் கொள்ளப்பட்டான். வீமன் சிறந்த சமையலாளனாயும் விளங்கினான்.

வீமன் பல்வேறு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டான். எல்லாவற்றிலும் சிறப்பாகச் செயற்பட்ட காரணத்தால் வீமன் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தான். பாலா அண்ணை வன்னிக்கு வருகை சந்தர்ப்பங்களில் வீமனே அவரது பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டான். அது யுத்தநிறுத்த காலப்பகுதியா அமைந்தபோதும் வீமனுக்கும் மற்றவர்களுக்கும் அது நிம்மதியான காலமன்று. அந்தக்காலப்பகுதியில் பாலா அண்ணையையும் தலைவரையும் தாக்குவதற்கென்று சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டமையும் எதிரியின் நீண்டதூர ஊடுருவித்தாக்கும் அணிகள் வன்னிக்குள் நகர்ந்திருந்தமையும் இவ்விடத்தில் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவை. அந்நேரத்தில் புலிகளின் படையணிகள் முக்கிய சாலைகள் முழுதும் 24 மணிநேரமும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்ததை வன்னியில் வாழ்ந்த மக்கள் நன்கறிவர்.

அந்த இக்கட்டுக்குள்ளும் வீமனும் அவனது அணியும் தளராமல் பணியாற்றினார்கள். சரியான தூக்கமின்றி, உணவின்றி, ஓய்வின்றி தமது கடமையைச் செய்தார்கள். வீமன் மேல் கொண்ட நம்பிக்கையால்தான் தலைவர் வீமனை பாலா அண்ணையின் பாதுகாப்பாளனாக நியமித்தார்.

பின்னர் கரும்புலிகள் அணியில் இணைந்துகொண்ட வீமன் எல்லாளன் நடவடிக்கையில் இளங்கோவின் உதிவிப் பொறுப்பாளனாகத் தேர்வு செய்யப்பட்டான். கொடுத்த பணியைச் சிறப்பாக முடித்து ஏனையோரோடு லெப்.கேணல் வீமனும் கண்மூடினான்.

லெப்.கேணல் மதிவதனன்……
என்னேரமும் கலகலப்பாகவே இருப்பான். அவனது கலகலப்பும் துடியாட்டமும் எல்லோரிடமும் அவனை நெருக்கமாக வைத்திருந்தது.
அடிப்படை இராணுவப் பயிற்சியின் பின்னர் வெவ்வேறு பணிகளைச் செய்து இறுதியில் வந்து சேர்ந்தது கனரக ஆயுதப் பயிற்சியாசிரியனாக. சில விமான எதிர்ப்புப் பீரங்கிகள், கடற்சண்டைக்கான ஆயுதங்கள் என்பவற்றுக்கான பயிற்சியாளனாக இவன் தேர்வானான். அப்போது இம்ரான்-பாண்டியன் படையணியின் ஓரங்கமாக இருந்த லெப்.கேணல் ராதா வான்காப்பு அணியில் பயிற்சிக்கெனச் சென்ற இவனின் திறமை இறுதியில் இவனைப் பயிற்சியாளனாக்கியது.

பின்னர் வன்னியின் இறுதிச்சமரில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் கருணாகரனின் வழிகாட்டலில் வளர்ந்த மதிவதனன் பின்னர் தனித்துப் பயிற்சியளிக்கும் நிலைக்குத் தன்னை வளர்த்துக் கொண்டான். கருணாகரன் வேறு கடமைக்கென பயிற்சிக் கல்லூரியிலிருந்து வெளியேறியபின்னர் மதிவதனனே அவ்விடத்தையும் நிரப்பினான். தனது ஆற்றலாலும் ஆளுமையாலும் போராளிகள் பலரைத் திறம்பட வளர்த்துவிட்டவன் மதிவதனன். பின்னர் கரும்புலிகள் அணியில் இணைந்து எல்லாளன் சிறப்பு நடவடிக்கைக்கான அணியிலும் இணைத்துக் கொள்ளப்பட்டான். தரப்பட்ட பணியைச் சிறப்பாக முடித்து ஏனையவர்களோடு தன்னையும் வெற்றிக்காக ஆகுதியாக்கிக் கொண்டான்.

மேஜர் இளம்புலி ….
இம்ரான் பாண்டியன் படையணியில் மருத்துவப் போராளியாய் தனது கடமையைச் செய்துகொண்டிருந்தவன். இவனும் நல்ல கலகலப்பாகவும் துடியாட்டமாகவுமே இருப்பான். அனேகமான பயிற்சி முகாம்களில் மருத்துவப் போராளியாகப் பணியாற்றியிருந்தான். சில போர்க்களங்களில் இவனின் பங்களிப்பு மற்றவரிடையே இவனைப் பிரபலப்படுத்தியது.
இவனது நீண்டநாள் விரும்பத்தின்படி கரும்புலிகள் அணியில் இணையும் வாய்ப்புக் கிடைத்தது. பின்னர் எல்லாளன் நடவடிக்கைக்கான சிறப்பணியில் இணைத்துக் கொள்ளப்பட்டான். அந்நடவடிக்கையில் புலிக்கொடியோடு சென்று தான் நினைத்ததைச் சாதித்து வீரகாவியமானான்.

இவர்களோடு,

கப்டன் தர்மினி…
என்று அழைக்கப்படும் கிளிநொச்சி 3 ஆம் வாய்க்கால் சுந்தரராஜ் வளர்ச்சித்திட்டத்தைச் சேர்ந்த கணேஸ் நிர்மலா,

கப்டன் புரட்சி
என்று அழைக்கப்படும் யாழ். மாவட்டத்தை நிலையான முகவரியாகவும், இல. 34 பரமேஸ்வரி உருத்திரபுரத்தை இடைக்கால முகவரியாகவும் கொண்ட செல்வராசா தனுசன்,

மேஜர் சுபன்….
என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும், கொண்ட இராஜவதனி டி-8 உருத்திரபுரம் கிளிநொச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்ட கதிரவன் ஜீவகாந்தன்,

மேஜர் காவலன்
என்று அழைக்கப்படும் 4 ஆம் கட்டை பூநகரி, கிளிநொச்சியைச் சேர்ந்த சண்முகம் சத்தியன்,

கப்டன் கருவேந்தன்
என்று அழைக்கப்படும் கிளிநொச்சி வட்டக்கச்சி எண் 6 ஹட்சன் வீதியைச் சேர்ந்த மயில்வாகனம் சதீஸ்குமார்,

கப்டன் புகழ்மணி….
என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும், இல. 19, 1 ஆம் வட்டாரம் முள்ளியவளையை இடைக்கால முகவரியாகவும் கொண்ட தர்மலிங்கம் புவனேஸ்வரன்,

மேஜர் எழில்இன்பன்….
என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும், தாரணி உதயநகர் கிளிநொச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்ட விமலநாதன் பிரபாகரன்,

கப்டன் புலிமன்னன்…
என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும், பாக்கியநாதன் எம்ஆர் ஓட்டுனர் சிவன் கோவிலடி நாச்சிக்குடாவை இடைக்கால முகவரியாகவும் கொண்ட கணபதி நந்தகுமார்,

கப்டன் அன்புக்கதிர்
என்று அழைக்கப்படும் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பெரியசாளம்பனை நிலையான முகவரியாகவும், ரா.இந்திரா அம்மன் கோவிலடியை கிளிநொச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்ட வில்சன் திலீப்குமார்,

கப்டன் சுபேசன்….
என்று அழைக்கப்படும் மன்னாரை நிலையான முகவரியாகவும் ச.நாகேந்திரம் வட்டக்கச்சி சந்தையடி கிளிநொச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்ட நாகராசா மகாராஜ்,

கப்டன் செந்தூரன்
என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும் ஜெகன் உதயநகர் கிளிநொச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்ட கணேசநாதன் தினேஸ்,

லெப். அருண்….
என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும், கனகநாதன் கரியாலை நாகபடுவான் முழங்காவிலை இடைக்கால முகவரியாகவும் கொண்ட பத்மநாதன் திவாகரன்,

கப்டன் பஞ்சீலன்
என்று அழைக்கப்படும் மட்டக்களப்பை நிலையான முகவரியாகவும், நாகரத்தினம் கணுக்கேணி முள்ளியவளையை இடைக்கால முகவரியாகவும் கொண்ட சிவானந்தம் கஜேந்திரன்,

மேஜர் கனிக்கீதன்….
என்று அழைக்கப்படும் மட்டக்களப்பைச் சேர்ந்த இராசன் கந்தசாமி,

கப்டன் ஈழப்பிரியா
என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகக் கொண்ட கந்தையா கீதாஞ்சலி,

கப்டன் அறிவுமலர்
என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சேவியர் உதயா,

கப்டன் ஈழத்தேவன்
என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தங்கராசா மோசிகரன் ஆகிய கரும்புலிகள் வீரச்சாவடைந்தனர்.

தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

Destroyed Aircraft: 11
1.Mi-24 attack helicopter – 1
2.Mi-17 helicopter – 2
3.Bell 212 helicopter – 1
4.Bell 206 helicopter – 1
5.K-8 trainer aircraft – 1
6.B.R. 6 training aircraft – 2
7.Beechcraft surveillance plane – 1
8.Unmanned aerial vehicles (UAVs) – 2

Damaged Aircraft: 15
1.Mi-24 attack helicopter – 1
2.Cessna 150 trainer aircraft – 4
3.B.R. 6 training aircraft – 5
4.Siamasetty bomber aircraft – 4
5.Unmanned surveillance aircraft – 1

The total damage was estimated at tens of millions of dollars.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment